Pages

Thursday, August 30, 2012

கா கா கா....


ஒரு ஊரிலே ஒரு காக்கை இருந்தது. அது ஒருநாள் நாள் தன்னுடைய நீண்டநாள் நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல அவனது ஊருக்கு புறப்பட்டது. 


அந்த நண்பனின் ஊர் காக்கையின் வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இருந்தது. 
எவ்வளவு தூரம் இருந்தால் என்ன? நண்பன் முக்கியமல்லவா..
காக்கை உற்சாகமாக புறப்பட்டு பறந்து சென்றது. 

நெடுநேரம் பிரயாணம் செய்த காக்கை களைப்புற்று ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வந்து அமர்ந்தது. 
சிறிது நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்த காக்கை 'மிகவும் தாகமாக இருக்கிறதே, சிறிது தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே' என்று எண்ணியது.

அந்த பகுதியில் நிறைய வீடுகள் இருந்தன. அதனால் அந்த காக்கை எப்படியும் தண்ணீர் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வானத்தில் பறந்து அந்த வீடுகளை சுற்றி வட்டமிட்டது.

ஆனால் எங்கும் தண்ணீர் கண்ணில் தென்படவில்லை. 
ஏமாற்றமடைந்த காக்கை, 'இது என்ன கொடுமை. எங்குமே தண்ணீர் இல்லையே. இப்போது நான் என்ன செய்வது? கடவுளே ! எனக்கு தாகமாக இருக்கிறதே, ஏன் நண்பனை காண வெகுதூரம் போகவேண்டுமே' என்று சோகமாக தனக்குள் பேசிக்கொண்டது. அப்போது அந்த காக்கையின் கண்ணில் ஒரு மண்குடம் தென்பட்டது.

அதை பார்த்த காக்கை ஆவலுடன் அதனருகில் சென்று அதனுள்ளே எட்டிப்பார்த்தது. 

என்ன ஆச்சரியம்! அந்த குடத்தின் உள்ளே கொஞ்சமாக தண்ணீர் இருந்தது. மிகுந்த உற்சாகமடைந்த காக்கை அதன் விளிம்பில் உட்கார்ந்து உள்ளே தலையை விட்டு தண்ணீரை குடிக்க முயன்றது. அனால் முடியவில்லை. தண்ணீர் மிகவும் அடியில் இருந்தது. காக்கையால் அவ்வளவு உள்ளே குனியமுடியவில்லை. 


தாகம் தீர்க்க உதவும் தண்ணீர் அருகே இருந்தும் அதை அள்ளிப்பருகமுடியாத தவிப்பில் இருந்த காக்கைக்கு சட்டென்று ஒரு யோசனை உதயமானது.

அறிவுக்கூர்மையுடைய அந்த காக்கை சுற்றும் முற்றும் பார்த்தது. கல்லும் மண்ணும் சில பூந்தொட்டிகளும் இருந்தன.

உடனே அந்த காக்கை அந்த கற்களை ஒவ்வொன்றாக எடுத்து அந்த தண்ணீர் இருந்த பானைக்குள் போட்டது.

வெகு தூரம் பிரயாணம் செய்து வந்த களைப்பையும் பொருட்படுத்தாமல் அந்த காக்கை மிகுந்த முனைப்புடன் அங்கு சிதறிக்கிடந்த கூழங்கர்களை எடுத்து பானைக்குள்  போட்டுக்கொண்டே எட்டி எட்டி பார்த்தது.

தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வருவதை கண்ட அந்த காக்கை பெரும் மகிழ்ச்சி அடைந்து  மேலும் உற்சாகத்துடன் கைக்கிளை நிரப்பியது.
சிறிது நேர முயற்சிக்கு பின், தண்ணீர் முழுவதுமாக மேலே வந்து நின்றது. அதை பார்த்த காக்கை தன்னுடைய முயற்சிக்கு பலன் கிடைத்ததை எண்ணி இறைவனுக்கு மனதார நன்றி கூறியது. பின்னர் நிதானமாக அந்த தண்ணீரை பருகி தாகம் தனித்துகொண்டது.

நண்பனை காண உயரே பறக்க தொடங்கியது. !!! கா கா கா....